குறுந்தொகை 94
94.தலைவி கூற்று.
திணை: முல்லை
கூற்று : தலைவி கூற்று
பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து
அரும்பே முன்னும் மிகச்சிவந் தனவே
யானே மருள்வென் தோழி பானாள்
இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும்
என்ஆ குவர்கொல் பிரிந்திசி னோரே
அருவி மாமலைத் தத்தக்
கருவி மாமழைச் சிலைதரும் குரலே.
- கதக்கண்ணன்
தெளிவுரை:
தோழி! பெரிய குளிர்ச்சியையுடைய மழைக்காலத்துக்கு உரிய அறிவின்மையையுடைய பிச்சியின் அரும்கள் மாரிக் காலத்திற்கு முன்பேயே மிகுதியும் சிவந்து காணப்படுகின்றன . அதனைக் கண்டு யானே கார்ப்பருவம் கண்டு மயங்குவேன் ? மயங்கேன். ஆயினும் பிரிந்து என்பால் இப்பொழுதும் மீண்டு வாராது தனித்திருப்பவராகிய தலைவர் , அருவியானது பெரிய மலையிலே தத்தி விழும்படி தொகுதியாகிய பெரிய மேகங்கள் முழங்கும் ஓசையை நடு இரவில் கேட்பாராயின் , பிரிவுத் துயரால் மேலும் என்ன நிலையினை எய்துவரோ ?
Comments
Post a Comment