நற்றிணை 91
91.தோழி கூற்று
திணை ; நெய்தல்
கூற்று ;
இது , தோழி தலைமகட்கு வரைவு மலிந்துரைத்தது.
விளக்கம் ;
திருமணத்திற்காகப் பொருள் திரட்டச் சென்ற தலைமகன் தலைவியைக் காணப் பகற்பொழுதில் வெளிப்படையாக வருகின்றான். திருமணம் முடிக்கும் எண்ணம் உடையவன். ஆதலின் காணப் பகற்பொழுதில் வருகிறான் என்று தலைவிக்கு தோழி கூறியது.
பாடல் ;
நீயுணர்ந் தனையே? தோழி வீயுகப்
புன்னை பூத்த இன்நிழல்உயர்கரைப்
பாடுஇமிழ் பனிக்கடல் துழைஇப் பெடையொடு
உடுங்குஇரை தேரும் தடந்தாள் நாரை
ஐய சிறுகண் செங்கடைச் சிறுமீன்
மேக்குயர் சினையின் மீமிசைக் குடம்பைத்
தாய்ப்பயிர் பிள்ளை வாய்ப்படச் சொரியும்
கானலம் படப்பை ஆனா வண்மகிழ்ப்
பெருநல் ஈகைநம் சிறுகுடிப் பொலியப்
புள்ளுயிர்க் கொட்பின் வள்ளுயிர் மணித்தார்க்
கடுமாப் பூண்ட நெடுந்தேர்
நெடுநீர்ச் சேர்ப்பன் பகல்இவண் வரவே.
- பிசிராந்தையார்.
தெளிவுரை ;
தோழி ! புன்னை மலர்கள் பூத்திருக்கும் கடற்கரையில் தன் படையோடு ஒரு சேரச் சென்று இரை தேடுகின்ற நாரைச் சிறிய மீன்களைப் பிடித்துக் கிளை மேல் உள்ள கூட்டின்கண் இருந்து தாயை அழைக்கும் தன் பிள்ளையின் வாயில் கொடுக்கும்; கடற்கரைச் சோலையில் உள்ள நமது சிறுகுடி பொலிவு பெறுமாறு பறவை ஒலித்தது போல மணிகள் கட்டப்பட்ட குதிரை பூட்டப்பட்ட தேரின் மேல் நமது தலைவன் வருகின்றான். பகற்பொழுதில் பலரும் காண வருகின்ற காரணத்தால் அவன் யாது கருதி வருகின்றான் என்பதைத் தெரிந்து கொண்டாயா? இவ்வாறு வெளிப்படையாக வருதலாலே , நின்னைத் திருமணம் செய்துகொள்ள வந்தான் போலும்.
சிறப்புக் குறிப்பு ;
நாரை தலைவனாகவும் கடலிற் சென்று இரை தேடுகின்ற நாரை போல வெளிநாடு சென்று பொருள் ஈட்டியதாகவும் கூட்டிலுள்ள நாரை பிள்ளைகளுக்கு உணவு சொரிதல் அவன் ஈட்டிய பொருளைத் தலைவிக்கு அளிப்பதாகவும் இப்பாடலுக்குப் பொருள் கொள்ளுதல் நன்று.
Comments
Post a Comment